உள்ளூர் செய்திகள்

போலீஸ் ஏட்டுவுக்கு அரிவாள் வெட்டு- கைது செய்ய வந்ததால் தொழிலாளி ஆத்திரம்

Published On 2023-11-04 05:31 GMT   |   Update On 2023-11-04 05:31 GMT
  • கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.
  • போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாயல்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுராஜா (வயது45). பனைத்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தனது உறவினர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாயல்குடி போலீசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் ஜேசுராஜா பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையில் ஏட்டு காளிமுத்து(35) மற்றும் போலீசார் ஜேசுராஜாவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதில் தகராறு முற்றவே, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்த ஜேசுராஜா போலீசாரை வெட்ட முற்பட்டார். இதனை ஏட்டு காளிமுத்து தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு கால் பகுதியில் சரமாரி வெட்டு விழுந்தது. உடனே சுதாரித்துக் காொண்ட போலீசார் சுற்றி வளைத்து ஜேசுராஜாவை பிடித்து கைது செய்தனர்.

அரிவாள்வெட்டில் காயமடைந்த ஏட்டு காளிமுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீஸ் ஏட்டுவுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News