உள்ளூர் செய்திகள்

தேங்காய் களம் உரிமையாளரை மிரட்டி ரூ.30 லட்சம் நகை-பணம் கொள்ளை: 7 பேர் கும்பல் கைவரிசை

Published On 2023-08-31 09:56 GMT   |   Update On 2023-08-31 09:56 GMT
  • ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர்.
  • கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சாவடி பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 47). இவர் தேங்காய் பருப்பு களம் வைத்து நடத்தி வருகிறார். அதன் அருகிலேயே இவரது வீடு உள்ளது. நேற்றிரவு வீட்டில் குணசேகரன் அவரது மனைவி செல்வி மற்றும் மகன்கள் தனுஷ், நிதர்சன் ஆகியோருடன் இருந்தார்.

அப்போது கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் 7 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பலில் ஒருவன் குணசேகரன் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மிரட்டினார். மற்றொருவன் தலையில் இரும்பு ராடை வைத்து கொண்டு மிரட்டினான்.

ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள, மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருக்கும் பணம், நகையை எல்லாம் கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

இதையடுத்து வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.13 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்தனர். இதனிடையே தேங்காய் பருப்பு களத்தில் வேலை செய்யும் தொழிலாளி, குணசேகரன் வீட்டில் இருந்து சத்தம் கேட்பதை கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். இதையறிந்த கொள்ளை கும்பல் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

உடனே இது குறித்து குணசேகரன் காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் கொள்ளையர்களை தேடினர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News