உள்ளூர் செய்திகள்

குமரியில் இன்று காலை வெளுத்து வாங்கிய மழை

Published On 2022-08-08 05:57 GMT   |   Update On 2022-08-08 05:57 GMT
  • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
  • பேச்சிப்பாறை நீர்மட்டம் 42 அடியை எட்டியதையடுத்து குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது.

நீர் பிடிப்பு பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 42 அடியை எட்டியதையடுத்து குழித்துறை கோதையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தச்சமலை, தோட்டமலை உள்பட மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

மழையுடன் சூறைக்காற்றும் வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. சூறைக்காற்று, மழையின் காரணமாகவும் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

காற்றின் வேகம் அதிகமாக வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரையோரமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

Tags:    

Similar News