உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்ட போது எடுத்தபடம்.

கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 5-வது நாளாக தொடர்ந்து போராட்டம்

Published On 2022-11-15 10:07 IST   |   Update On 2022-11-15 10:07:00 IST
  • கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும்.
  • பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை என ஊர் பொதுமக்கள் அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி தேன்கனிக்கோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகிறது.

இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொது மக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுள்ளாவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கல்குவாரிகளில் உள்ள கனரக வாகனங்கள், லாரிகள் அந்த கிராமத்தில் வழியாக சாலையில் செல்லும் போதும் பள்ளி குழந்தைகள் சத்தத்தினால் படிக்க இயலவில்லை.

கல்குவாரிகளில் கல் உடைக்க வைக்கும் வெடி வெடிப்பதன் மூலம் அதிகபடியான சத்தம், நச்சு காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை என ஊர் பொதுமக்கள் அரசு அலுவலர்களை பலமுறை சந்தித்து மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே காட்டில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 200 குடும்பங்கள் கைக்குழந்தைகளோடு 5 நாட்களாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் தங்களுடைய உடைமைகளை இழந்து காட்டில் அவதியுற்று வருகிறார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் எம்.பி. நேற்றிரவு கொரட்டகிரிக்கு சென்றார். அங்கு கொட்டகை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்தார். பின்னர் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.யும் கலந்து கொண்டார்.

இன்று 5-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News