போலீசில் சிக்காமல் இருக்க யூடியூப்பை பார்த்து நகைபறித்த நண்பர்கள் 2 பேர் கைது
- போலீசார் திறமையாக துப்பு துலக்கி நகைபறிப்பில் ஈடுபட்ட விஜய், படகோட்டி தமிழன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- போதைக்கு அடிமையான இருவரும் உல்லாச செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
பூந்தமல்லி:
சென்னை ராமாபுரம், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் ராதா. இவர் கெருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ராதா அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மாங்காடு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக போலீசார் நகை பறிப்பு நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்களை பிடிக்க வித்தியாசமாக போலீசார் முயற்சி செய்தனர். செயின் பறிப்பு நடந்த இரவு நேரத்தில் கொள்ளையர்களின் உருவம் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது ரிவர்ஸ் முறையில் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். சுமார் 600 கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
இதைவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நெற்குன்றத்தை சேர்ந்த விஜய்(29) அவரது நண்பரான நொளம்பூரை சேர்ந்த படகோட்டி தமிழன்(35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து யூடியூப் வீடியோக்களை பார்த்து நகை பறித்தது தெரியவந்தது. அவர்கள் யூடியூப்பில் போலீசார் எதனை வைத்துசெயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிப்பார்கள், எந்தெந்த தடயங்களை சேகரிப்பார்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு உள்ளனர்.
இதனை வைத்து நண்பர்கள் இருவரும் நகை பறிப்பு சம்பவத்துக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்போது தங்களின் உடைகளை மாற்றி இருக்கிறார்கள். மேலும் கெருகம்பாக்கத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பின்னர் அவர்கள் பல்வேறு தெருக்களின் வழியாக சென்று ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அங்கிருந்து வேறு உடைகளை மாற்றி உள்ளனர். இதைத்தொடர்ந்து மதனந்தபுரம் அருகே சென்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக தப்பி இருக்கிறார்கள். இதேபோல் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளேட்டையும் மாற்றி உள்ளனர்.
ஆனால் போலீசார் திறமையாக துப்பு துலக்கி நகைபறிப்பில் ஈடுபட்ட விஜய், படகோட்டி தமிழன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர். யூடியூப் வீடியோக்களை பார்த்து பல்வேறு முயற்சிகள் எடுத்தும் முதல் நகைபிறிப்பிலேயே நண்பர்கள் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
போதைக்கு அடிமையான இருவரும் உல்லாச செலவுக்காக செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.