உள்ளூர் செய்திகள்

சீர்காழி அருகே சாலை விபத்தில் போலீஸ்காரர் பலி

Published On 2024-03-10 04:20 GMT   |   Update On 2024-03-10 04:20 GMT
  • ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் ராஜேஷ் நேற்று இரவு தனது தம்பி ராஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.

அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நத்தம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்தில் இறந்த ராஜேஷ்சுக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

Tags:    

Similar News