உள்ளூர் செய்திகள்

புளியங்குடியில் நள்ளிரவில் சம்பவம்- வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் கழுத்து அறுத்து கொலை

Published On 2022-07-07 10:48 GMT   |   Update On 2022-07-07 10:48 GMT
  • கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
  • கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள நெற்கட்டும்செவலை அடுத்த பச்சேரி கீழமடத்து தெருவை சேர்ந்தவர் கருப்பையா(வயது 62).

இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருப்பையாவின் மனைவி தனது மகன் வீட்டில் தங்கி இருப்பதால் கருப்பையா மட்டும் பச்சேரியில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல் வீட்டுக்குள் தூங்க சென்ற கருப்பையா, இன்று காலை வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை. அவரது வீட்டின் கதவு பூட்டிக்கிடந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கருப்பையா படுக்கை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே அவர்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கருப்பையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருப்பையா அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News