உள்ளூர் செய்திகள்

பரமக்குடி அருகே வாலிபர் அடித்துக்கொலை

Published On 2022-12-21 05:33 GMT   |   Update On 2022-12-21 05:33 GMT
  • எமனேசுவரம் மயான பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
  • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் மயான பகுதியில் இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த வாலிபரின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாேரா அடித்து கொலை செய்துள்ளதை போலீசார் உறுதி செய்தனர்.

அவர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. பின்பு அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் பிணமாக கிடந்தபகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரு மோட்டார்சைக்கிள் நின்றது.

அது கொல்லப்பட்ட வாலிபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மேலும் அந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணின் மூலம் கொலையானவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

அதில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கல்லணியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அவர் எதற்காக பரமக்குடி வந்தார்? என்பது தெரியவில்லை.

அவரது மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்தில் நின்றதால் அவருக்கு தெரிந்தவர்கள் யாரேனும் அங்கு வரவழைத்து கொலை செய்தார்களா? அல்லது யாரேனும் மர்ம நபர்கள் கடத்தி வந்து அடித்து கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரை கொன்ற கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News