பெரணமல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து செல்போன் நிறுவன ஊழியர் பலி
- தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 28). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இவரது தாத்தா இறந்து விட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெகதீசன் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த சென்னந்தல் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று மாலை ஜெகதீசன் தவணி மேட்டூர் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து விட்டார். நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீசன் வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேடி பார்த்தனர்.
கிணற்றின் அருகே ஜெகதீசன் செருப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி ஜெகதீசனை தேடினர். அப்போது ஜெகதீசனை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் அவரது உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.