உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்தவர் திடீர் மாயம்- வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றார்

Published On 2023-03-05 05:13 GMT   |   Update On 2023-03-05 05:13 GMT
  • போலீசார் விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.
  • தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் சுரேஷ் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

போரூர்:

சென்னை கே.கே.நகர், 14-வது செக்டார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). வடபழனியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்ற சுரேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த ராதா, வீட்டில் இருந்த கணவரின் செல்போனை ஆய்வு செய்தார்.

அப்போது அதில் "ஆன்லைன் ரம்மி மூலம் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன், நான் வாழ தகுதியற்றவன். எனவே தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என கடிதம் எழுதி அதை செல்போனில் படம் பிடித்து வைத்து இருப்பது தெரிந்தது.

இதனை கண்டு ராதா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார்.

வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாயமான சுரேசை தேடி வந்தனர். விசாரணையில் சுரேஷ் கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாடி வருவதும் இதன் மூலம் ரூ.16 லட்சம் பணத்தை அவர் பறிகொடுத்து இருப்பதும் தெரிந்தது.

மேலும் தனது நண்பர்கள் சிலரிடம் கடன் வாங்கியும் ரம்மி விளையாடி பணத்தை இழந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் மனவேதனை அடைந்த சுரேஷ் கடிதம் எழுதி வைத்து விட்டு அதனை செல்போனில் பதிவு செய்து மாயமாகி இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியான வினோத் குமார் என்பவர் நேற்று முன்தினம் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News