உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் ஆம்னி கார் கியாஸ் வெடித்து தீப்பிடித்தது- அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்

Published On 2022-11-27 07:51 GMT   |   Update On 2022-11-27 07:51 GMT
  • சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது.
  • நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 52).

இவர் இன்று அதிகாலை மோகனூருக்கு தனது குடும்பத்தினர் 5 பேருடன் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கியாஸ் நிரப்பி விட்டு இயக்க முயன்றபோது, கார் இயங்கவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் காரை தள்ளிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து குபுகுபுவென தீப்பிடித்தது. கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த தீ பரவியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் காரை அங்கு நிறுத்தி விட்டு, அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் தொலைவில் நின்று கொண்டு இது பற்றி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும் சிறிது நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவி கார் கொளுந்து விட்டு எரிந்தது. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அருகில் யாரும் செல்லவில்லை. வாகன ஓட்டிகள், தங்களது கார்களை சற்று தொலைவிலேயே நிறுத்திக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இது குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News