உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே மூதாட்டி வெட்டி கொலை

Published On 2022-09-27 05:19 GMT   |   Update On 2022-09-27 05:20 GMT
  • கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது.
  • தோட்டத்து வீட்டில் வசித்துவந்த மூதாட்டி கே.மேட்டுபாளையம் நடுவீதியில் எப்படி அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தார் என்றும் போலீசார் விசாரணை.

கோபி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி (85).இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும், ராதா என்ற மகளும் உள்ளனர்.

சரஸ்வதியின் கணவர் ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் சுகுமார் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவர்களது மகள் ராதாவை கோபிசெட்டிபாளைம் பகுதியில் உள்ள டாக்டர் நித்யானந்தம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். '

மகன், மகள், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருவதால் மூதாட்டி சரஸ்வதி மட்டும் கே. மேட்டுபாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிஅளவில் மூதாட்டி சரஸ்வதி கே. மேட்டுபாளையம் நடுவீதியில் உடலில் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்த மூதாட்டி சரஸ்வதியை மீட்டு கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்துக்கு துப்பறியும் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மேலும் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சரஸ்வதிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் அவர் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு யாரோ சிலர் சொத்தை அபகரிக்கும் முயற்சியில் கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் தோட்டத்து வீட்டில் வசித்துவந்த மூதாட்டி கே.மேட்டுபாளையம் நடுவீதியில் எப்படி அரிவாளால் வெட்டப்பட்டு கிடந்தார் என்றும் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோபி செட்டிபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News