திருப்பரங்குன்றத்தில் போலீஸ்காரர் மோட்டார்சைக்கிளுக்கு தீவைத்த மர்மநபர்கள்
- சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
- மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இவரது வீட்டின் வாசலில் ஏதோ தீபற்றி எரிவதுபோல் திடீரென வெளிச்சமாக தெரிந்தது. இதையடுத்து அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.