ராசிபுரம் அருகே விபத்து: மோட்டார்சைக்கிள் மீது மோதி மரைன் என்ஜினீயர் பலி
- நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.
சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.