உள்ளூர் செய்திகள்

அபிராமபுரத்தில் வியாபாரி வெட்டிக்கொலை- சொத்து தகராறில் தம்பி மகன் தீர்த்து கட்டினார்

Published On 2022-11-13 11:04 GMT   |   Update On 2022-11-13 11:04 GMT
  • அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
  • பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார்.

சென்னை:

சென்னை அபிராமபுரம் படவட்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ். தூத்துக்குடியை சேர்ந்த இவர் சென்னையில் தங்கி இருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

இவருக்கும் இவரது தம்பி குடும்பத்துக்கும் இடையே தூத்துக்குடியில் உள்ள சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. தம்பி மகனான அற்புதராஜ் சென்னை ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அபிராமபுரத்தில் உள்ள பெரியப்பா பொன்ராஜின் வீட்டுக்கு அற்புதராஜ் சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் பொன்ராஜை, அற்புதராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அற்புத ராஜ், பொன்ராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து பொன்ராஜை கொலை செய்து விட்டேன் என்று அற்புத ராஜ் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் இருப்பவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதன் பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அபிராமபுரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அற்புதராஜை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News