உள்ளூர் செய்திகள்

தமிழக-கர்நாடகா எல்லையில் இன்று 2-வது நாளாக கன்னட அமைப்பினர் போராட்டம்

Published On 2023-09-23 09:03 GMT   |   Update On 2023-09-23 09:03 GMT
  • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
  • ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓசூர்:

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் கர்நாடக ரக்ஷன வேதிகே என்ற கன்னட அமைப்பின் சார்பில், இன்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கர்நாடகாவிலிருந்து, தமிழகத்திற்கு தினமும் 5,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து, கர்நாடக ரக்ஷன வேதிகே அமைப்பின் மாநில தலைவர் பிரவீண் ஷெட்டி உத்தரவின் பேரில், அந்த அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடம், மற்றும் பானைகளை உடைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பும், பதட்டமான சூழ்நிலையும் நிலவியது. இதன் காரணமாக தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் இரு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தால், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News