உள்ளூர் செய்திகள் (District)

களக்காட்டில் கடனை திருப்பி கேட்டு வேளாண்மை அதிகாரியை காரில் கடத்தி மிரட்டிய வாலிபர் கைது

Published On 2023-05-08 05:14 GMT   |   Update On 2023-05-08 05:14 GMT
  • களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் பாலாமடை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சண்முகசிகா (வயது43). இவர் களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.

கடந்த 1 ஆண்டுக்கு முன் சண்முகசிகா தச்சநல்லூர் அருகே உள்ள மேலகரையை சேர்ந்த இசக்கியம்மாளிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும், இந்த கடனை அவர் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் களக்காடு வேளாண்மை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சண்முகசிகா கலந்து கொண்டார். உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சண்முகசிகாவை, இசக்கியம்மாளின் மகனான அம்பை ரகுமான் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (36), அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர் காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினர்.

அவர் ஏறமறுத்த போது எனினும் அவரை காரில் ஏற்றி மேலகரைக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து கத்தி முனையில் அவரை பணத்தை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் அவரை விடுவித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரது நண்பர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News