உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் பழமையான காலபைரவர் சிலையுடன் கல்வெட்டு

Published On 2023-04-17 06:50 GMT   |   Update On 2023-04-17 06:50 GMT
  • ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது.
  • ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஊத்துக்கோட்டை:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பிச்சாட்டூர், ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடுகண்டிகை, காரணி சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் பழமையான கல்வெட்டு ஒன்று கிடப்பதை அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த கல்வெட்டை கைப்பற்றினர். சுமார் 4 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட மிகவும் பழமையான அந்த கல்வெட்டில் கால பைரவர் உருவம் இருந்தது.

மேலும் கால பைரவர் உருவத்தின் கீழ் சில எழுத்துக்கள் பதியப்பட்டுள்ளன. அது எந்த காலத்தில் உள்ள மொழி என்பது தெரியவில்லை.

இது குறித்து சென்னையில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சி கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் ஆராய்ச்சி செய்த பின்னர்தான் கல்வெட்டு எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். கண்டெடுக்கப்பட்ட காலபைரவர் கல்வெட்டு தற்போது ஆரணிஆற்றின் கரையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் பார்த்து செல்கிறார்கள்.

Tags:    

Similar News