உள்ளூர் செய்திகள்

சென்னை புறநகரில் பலத்த மழை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 606 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-11-10 09:15 GMT   |   Update On 2023-11-10 09:15 GMT
  • பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
  • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். இதில் 3141 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 86 சதவீதம் நிரம்பி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.08 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 68 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 26 கனஅடிதண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News