உள்ளூர் செய்திகள்

அம்பத்தூர் அருகே மனைவியை அடித்து கொன்ற கணவர்

Published On 2022-12-19 10:40 IST   |   Update On 2022-12-19 10:40:00 IST
  • நேற்று இரவு மது போதையில் வந்த வேலாயுதம் மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார்.
  • ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.

அம்பத்தூர்:

அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News