உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் ஓட்டல் தொழிலாளி வெட்டி படுகொலை- குடிபோதையில் தகராறு செய்ததால் தம்பி ஆத்திரம்

Published On 2022-06-08 11:42 GMT   |   Update On 2022-06-08 11:42 GMT
ஈரோட்டில் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த தம்பி ஓட்டல் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு:

திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (32). திருமணமான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அருண்பாண்டியனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இவரது தம்பி அஜித்குமார். திருமணமான இவர் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி லேப் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அருண்பாண்டியன் அவ்வப்போது குடிபோதையில் தனது தம்பி அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக ஈரோடு மொசவண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி அஜித்குமார் தனது அண்ணனை சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கறி வெட்டும் கத்தியால் அண்ணனை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். இருந்தாலும் ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் பின் தொடர்ந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அருண்பாண்டியன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News