உள்ளூர் செய்திகள்

மாணவர்களை அவதூறாக பேசிய அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்டு

Published On 2022-09-29 10:57 GMT   |   Update On 2022-09-29 10:57 GMT
  • தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் செல்லக்கூடிய 32-ம் நம்பர் அரசு பஸ் டிரைவர் முருகேசன் என்பவர் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.
  • மாணவர்களின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

நங்கவள்ளி:

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை, தேங்காய்கொட்டாய், சீரங்கனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் காலை மற்றும் மாலையில் அரசு பஸ்சில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் செல்லக்கூடிய 32-ம் நம்பர் அரசு பஸ் டிரைவர் முருகேசன் (வயது 40) என்பவர் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவர்களின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் தெரிவித்தனர்.

ஆனால் போலீசார் கண்டுகொள்ளாததால், நேற்று மேட்டூரில் இருந்து தாரமங்கலம் சென்ற 32-ம் நம்பர் அரசு பஸ்சை மாணவர்களின் பெற்றோர் சிறைபிடித்து, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த தாரமங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள், பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து விசாரணை நடத்திய தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ரவிச்சந்திரன், பஸ் டிரைவர் முருகேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News