உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2024-01-05 09:45 GMT   |   Update On 2024-01-05 09:45 GMT
  • மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும்.
  • நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1991-ல் அரசு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது.

அப்போது கட்டிடம் அருகில் உள்ள 51 சென்ட் நிலத்தையும் ஆக்கிரமித்து மேல் வாடகைக்கு சைக்கிள் ஸ்டான்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.

நகரின் முக்கிய சாலையில், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கிட்டத்தட்ட 32 வருடமாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்தது.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திரஷா, நகர அமைப்பு அலுவலர் குணசேகரன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரத்துடன் இன்று காலை வந்தனர்.

அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்த தடுப்புகளை ஜே.சி.பி.எந்திரத்தால் இடித்து அகற்றினர். முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.51 கோடி இருக்கும். அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றனர்.

Tags:    

Similar News