உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான தந்தை-மகனை படத்தில் காணலாம்.

வேப்பூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

Published On 2022-10-10 04:28 GMT   |   Update On 2022-10-10 04:28 GMT
  • பலத்த மழை காரணமாக கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
  • பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. அவரது மனைவி பெரியம்மா. இவர் நேற்று இரவு துணிதுவைத்துவிட்டு அதனை காய வைப்பதற்காக வீட்டின் வெளிபுறம் உள்ள கம்பியில் தொங்கவிட்டார்.

அப்போது பலத்த மழை காரணமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனை கவனிக்காமல் பெரியம்மா கம்பியை தொட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இவரது அலறல் சத்தம்கேட்டு கணவர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவர் தனது மனைவியை காப்பாற்ற முயன்றபோது அவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

இதனை அறிந்த வீட்டில் இருந்த ஆறுமுகத்தின் மகன் மணிகண்டன் (வயது 32). ஓடிவந்து தனது பெற்றோரை காப்பாற்ற முயன்றார். அப்போது மணிகண்டனும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் அங்கு வந்தனர். 3 பேரும் மயங்கி கிடப்பதை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன், ஆறுமுகம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரியம்மாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே வீட்டில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News