உள்ளூர் செய்திகள்
டிராக்டர் மூலம் தக்காளி செடிகள் அழிக்கப்பட்ட காட்சி.

உரிய விலை இல்லாததால் டிராக்டர் மூலம் விளை நிலத்திலேயே தக்காளிகளை அழிக்கும் விவசாயிகள்

Published On 2022-11-29 11:10 IST   |   Update On 2022-11-29 11:10:00 IST
  • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம்,பொங்கலூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம்.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி விலை உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானதால், விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி மேற்கொண்டனர்.

கடந்த மாதத்தில் விதைக்கப்பட்ட தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மேலும் பருவம் தவறி பெய்த மழையால் விளைந்த தக்காளிகள் அழுகி வீணாகி போனது. இதனால் விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து அவற்றை உரமாக மாற்றி வருகின்றனர். இது குறித்து சித்தம்பலம் பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால், பல்லடம்,பொங்கலூர் பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்தோம். கடந்த ஆகஸ்ட் மாதம் விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் அதிக வரத்து காரணமாக தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் பருவம் தவறி பெய்த மழையால், தக்காளிகள் செடியிலேயே அழுகிவிட்டது. மேலும் விளைந்த தக்காளியை தரம் பார்த்து பிரித்தெடுக்க தொழிலாளர்களின் கூலி அதிகமாகிறது. இதனால் தக்காளியை அறுவடை செய்தும் பயன் இல்லாததால் தக்காளியை விளைந்த நிலத்திலேயே டிராக்டர் கொண்டு அழித்து உரமாக மாற்றி வருகிறோம். தக்காளியுடன் அதற்காக செய்த முதலீடு, உழைப்பு ஆகியவை மண்ணோடு மண்ணாய் போனதுதான் மிச்சம்.

இவ்வாறு வேதனையுடன் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News