வாக்கு சாவடிமையங்களில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி
- பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர்.
- இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 238 வாக்குச்சாவடி மையங்கள் 52 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு சாவடி மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி மையங்களில் 1,206 அலுவலர்கள் பணியாற்ற உள்ளார்கள். இவர்களுக்கு 3 கட்ட பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. ஓட்டு பதிவு அன்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் முதன்மை வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர் மற்றும் 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1,206 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எப்படி கையாள்வது, பழுது ஏற்பட்டால் அவற்றை எப்படி சரி செய்வது மற்றும் வாக்காளர் பட்டியல் போன்றவற்றை எவ்வாறு கையாளுவது என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வரும் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெறுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 26-ந் தேதி 3-ம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. இறுதி பயிற்சி நாளன்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் எந்தந்த வாக்குச் சாவடிகளில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆணை வழங்கப்படும்.