உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே ஓட்டல் உரிமையாளரை அடித்துக் கொன்ற ஊழியர்

Published On 2022-11-24 16:33 IST   |   Update On 2022-11-24 16:33:00 IST
  • ஓட்டல் உரிமையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • தப்பியோடிய ஓட்டல் ஊழியர் ஜோசப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அருகே தாபா ஓட்டல் உரிமையாளரை கொலை செய்துவிட்டு ஊழியர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் அரியானூர் பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வந்தார். இவர், வியாபாரம் முடிந்ததும் இரவு தனது ஓட்டலிலேயே தங்குவது வழக்கம். நேற்று இரவும் வியாபாரத்தை முடித்துவிட்டு ஓட்டலிலேயே படுத்து தூங்கினார்.

இந்நிலையில இன்று காலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது, கந்தசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து உடனடியாக ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அரியானூர் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவருக்கு லிப்ட் கொடுத்த கந்தசாமி, அவரது சூழலை கேட்டு தனது ஓட்டலிலேயே வேலையும் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஜோசப் நேற்று நள்ளிரவு ஓட்டலில் திருட முயன்று உள்ளார். இதைபார்த்த உரிமையாளர் கந்தசாமியை, ஜோசப் அங்கிருந்த கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து ஜோசப் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து தப்பியோடிய ஓட்டல் ஊழியர் ஜோசப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News