திருவெண்ணைநல்லூர் அருகே மகன்-மகள்கள் பராமரிக்காததால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி பலி
- கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.
- முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (வயது 70). இவரது மனைவி கமலா (60).
இவர்கள் தள்ளுவண்டி மூலம் வளையல் வியாபாரம் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சாரங்கபாணி, கமலா ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இருவருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூட ஆள் இல்லாமல் அவதியுற்று வந்தனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் கடந்த 19-ந்தேதி அதிகாலை விஷம் குடித்தனர். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சாரங்கபாணி உயிரிழந்தார். அவரது மனைவி கமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்தரியில் சிகிச்சை பெற்று வந்த கமலா, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 6 குழந்தைகள் பெற்றும் பராமரிக்க யாரும் இல்லாததால் வயது முதிர்ந்த கணவன், மனைவி விஷம் குடித்து இறந்து போனது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.