உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் கல்லால் தாக்கி முதியவர் கொலை- மது கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்

Published On 2022-11-24 05:57 GMT   |   Update On 2022-11-24 05:57 GMT
  • மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார்.
  • உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோடு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது அங்கு தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனால் அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டவர் அப்பகுதியை சேர்ந்த கோபால் (வயது 30) என்பவருடன் சேர்ந்து குப்பைகளை அள்ளி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவரின் பெயர் உதய் என போலீசாரிடம் கோபால் தெரிவித்தார்.

உதய்யும், கோபாலும் குமார்நகர் பகுதியில் குப்பைகளை அள்ளி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடித்து வந்துள்ளனர். நேற்று கோபாலுக்கு மது குடிக்க பணம் இல்லை.

அப்போது மது வாங்கி வைத்திருந்த உதய்யிடம் கோபால் தனக்கும் மது தருமாறு கேட்டுள்ளார். ஆனால் உதய் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால் அங்கு கல்லை எடுத்து உதய்யின் தலையில் போட்டுள்ளார். இதில் உதய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து கோபால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். ஆனால் போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டார். தொடர்ந்து கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News