உள்ளூர் செய்திகள்

பழனி இடும்பன் கோவிலில் முடி காணிக்கைக்கு பணம் கேட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.

பழனி இடும்பன் கோவிலில் முடி காணிக்கைக்கு பணம் கேட்டதால் பக்தர்கள் போராட்டம்

Published On 2023-02-17 09:34 GMT   |   Update On 2023-02-17 09:34 GMT
  • கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை இடும்பன் கோவில் அருகே உள்ள முடிகாணிக்கை மையத்திற்கு வந்தனர்.
  • பக்தர்களிடம் ரூ.100 கட்டாயம் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

பழனி:

பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம் நிறைவடைந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக அடிவாரம், இடும்பன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் முடி காணிக்கை செலுத்தும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் பழனி கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டாய வசூலில் ஊழியர்கள் ஈடுபடுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில் மணப்பாறை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்று காலை இடும்பன் கோவில் அருகே உள்ள முடிகாணிக்கை மையத்திற்கு வந்தனர். அவர்களிடம் ரூ.100 கட்டாயம் செலுத்த வேண்டும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிகாணிக்கைக்கு இலவசம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் எதற்காக பணம் கேட்கிறீர்கள் என கேட்டனர். ஆனால் பணம் கொடுத்தால்தான் மொட்டை அடிக்கப்படும் என்று கண்டிப்பாக கூறியதால் பக்தர்கள் அங்கு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கோவில் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முடிகாணிக்கைக்கு பணம் கேட்டு மிரட்டும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News