வேதாரண்யம் குளத்தில் 6 மாதமாக பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிப்பட்டது
- குளத்தில் முதலை இருப்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
- 6 மாதமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொது மக்கள் அதே பகுதியில் உள்ள புதுக்குளத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சுமார் 6 மாத்திற்கு முன்பு இந்த குளத்தில் முதலை இருப்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில் வனக்காவலர்கள் குளத்திற்கு சென்று முதலையை தேடிப்பார்த்தனர். அப்போது முதலை கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் குளத்தின் கரையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பின்னர் குளத்தில் வலைகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலையில் பொது மக்கள் அந்த வழியாக நடந்து சென்றனர். அப்போது வலையில் முதலை சிக்கியது தெரியவந்தது. இதைத் தொடந்து பொது மக்கள் கோடியக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனக்காவலர்கள் மற்றும் தீயணைப்புதுறையினர் அங்கு சென்று வலையில் சிக்கிய சுமார் 5 அடி நீள 30 கிலோ எடையுள்ள முதலையை பிடித்தனர். பின்னர் பிடிப்பட்ட முதலை கும்பகோணம் அணைக்கரை பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 6 மாதமாக பொது மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.