பருவமழை தொடக்கம்: அனைத்து துறையினரும் தயாராக இருக்க கலெக்டர் உத்தரவு
- ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
- பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பொன்னேரி:
வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏரி, குளங்களின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில் பருவமழை முன்எச்சரிக்கை மற்றும் தயார் நிலை குறித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் கூறியதாவது:-
பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயாராக இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த பருவமழையின் போது ஆரணி ஆற்றில் 8 இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டது. தற்போது வருகின்ற பருவமழைக்கு முன்பு அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான உபகரணங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தாசில்தார் செல்வகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.