உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் பள்ளி மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

Published On 2022-09-06 09:17 GMT   |   Update On 2022-09-06 09:17 GMT
  • மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
  • 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தின் போது பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. அதோடு பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.

எனினும் மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளியை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இன்று காலை அவர்கள் கள்ளக்குறிச்சி வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பள்ளியை திறக்க கோரி கோஷம் போட்டனர். பெற்றோரின் திடீர் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னர் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலெக்டரை சந்தித்து மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News