சேத்துப்பட்டு வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி
- அய்யப்பனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 4- வது மாடியில் உள்ள ஒரு கடைக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு இந்த பணியில் அய்யப்பன் என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார்.
கயிற்றில் தொங்கியபடியே அவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து விழுந்தது. இதில் தொழிலாளி அய்யப்பன் தவறி கீழே விழுந்தார்.
இதில் கீழே விழுந்த அய்யப்பனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த அய்யப்பனின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள முகையூர் ஆகும்.
அய்யப்பன் உயிரிழந்தது தொடர்பாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னைக்கு உடலை வாங்க விரைந்துள்ளனர்.