லாரி ஏற்றி 6 பேரை கொன்ற வழக்கில் கைதானவர்- பாளை ஜெயிலில் கைதி திடீர் மரணம்
- ஏலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் உதயகுமார் லாரியை ஏற்றி 2 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் புளியரை கற்குடியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 33). லாரி டிரைவர்.
இவர் கடந்த 2015-ம் ஆண்டு கற்குடி பகுதியில் லாரியை ஆட்டோ மீது மோதவிட்டார். அப்போது அதில் பயணம் செய்த செங்கோட்டை அருகே உள்ள லாலாகுடியிருப்பை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக புளியரை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மீன்பாசி ஏலத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் உதயகுமார் லாரியை ஏற்றி 2 பெண்கள் உள்பட 6 பேரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உதயகுமாரை போலீசார் கைது செய்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்த அவர் தனக்கு எதிராக சாட்சி அளித்த அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் என்பவரை கொலை செய்தார். இந்த கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் வந்து தலைமறைவானார். சமீபத்தில் அவருக்கு பிடிவாரண்டு போடப்பட்டு போலீசார் தேடி வந்தனர். பின்னர் கடந்த ஜூலை மாதம் பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டார். இன்று அதிகாலை 3 மணிக்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அங்கு இரவு பணியில் இருந்த ஜெயிலர்கள், விசாரணை கைதியான உதயகுமாரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.