திருவள்ளூர் மாவட்டத்தில் 660 தங்கும் இடங்கள் தயார் மழை பாதிப்பு புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை- கலெக்டர் தகவல்
- 4,338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் பெரு மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறை.
திருவள்ளூர்:
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது:-
திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதிகள் -8, மற்றும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள்-39, மிதமான பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் -44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் - 42 ஆக மொத் தம் 133 மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளுக்கு 42 பல்வேறு துறைகள் அடங்கிய மண்டல குழுக்களும், 22 தயார் நிலையில் உள்ள கூடுதல் பாதுகாப்பு குழுக்களும் என மொத்தம் 64 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் முன்எச்சரிக்கை குழுவில் 9 உறுப்பினர்களும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 12 உறுப்பினர்களும், வெளியேற்றுதல் குழுவில் 31 உறுப்பினர்களும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 27 உறுப்பினர்களும் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் 4,338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 400 தன்னார்வலர்களுக்கு ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலை வனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர்-1 மற்றும் எளாவூர் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன.
கால்நடை பராமரித்துறை வாயிலாக கால்நடைகளை காப்பாற்ற 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவ குழுக்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளனர்.
மாவட்டத்தில் 74,680 மணல் மூட்டைகள், 4945 சவுக்கு மரக்கம்புகள், ஜே.சி.பி. எந்திரங்கள் 35, 43 பொக்லைன் எந்திரங்கள், 111 மரம் அறுக்கும் மின்கருவிகள், 372 கயிறுகள், 86 படகுகள், 28 அதி நவீன நீர் உறிஞ்சும் எந்திரங்கள், 105 ஜெனரேடர், 32 தண்ணீர் லாரிகள், 106 நீர் இறைக்கும் பம்புகள், 631.23 மெ.டன் பிளீச்சிங் பவுடர், 56 தார் பாய்கள், 242 டார்ச் லைட் கள், 1012 மின்கம்பங்கள், 250 மின் மாற்றிகள் ஆகியவை தயாராக உள்ளன. திருவள்ளுர் மாவட்டத்தில் 987.74 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 8,432 சிறுபாலங்கள் மற்றும் 76 பாலங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள நீர் வரத்து தங்கு தடையின்றி வெளியேற வரத்து கால்வாய் மற்றும் போக்கு கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டத்தில் பொதுமக்கள் பெரு மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் 24மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746- என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும், வாட்ஸ் அப் எண். 94443178 62-லும் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.