உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கூடுதல் பணம் தருவதாக ரூ.40 கோடி மோசடி- கைதான 2 போலீசார் 'சஸ்பெண்டு'

Published On 2023-04-04 06:56 GMT   |   Update On 2023-04-04 06:56 GMT
  • போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி மரியச் செல்வி. இவர்களது மகன்கள் சகாயபாரத், ஆரோக்கிய அருண், இருதயராஜ்.

இவர்களில் சகாயபாரத் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீசாக பணியாற்றினார். ஆரோக்கிய அருண் காஞ்சிபுரத்தில் போக்குவரத்து போலீசாக இருந்தார். இருதயராஜ் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு அதிகம் லாபம் தருவதாக கூறி பொது மக்கள் மற்றும் போலீசாரிடம் பணத்தை வசூல் செய்தனர். இதுவரை சுமார் ரூ.40 கோடி வரை பணம் வசூலித்ததாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தனர்.

மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.40 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாக ஜோசப், அவரது மனைவி மரிய செல்வி, ஆரோக்கிய அருண், அவரது மனைவி மகாலட்சுமி, இருதயராஜ், அவரது மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத் அவரது மனைவி சமியா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் போலீஸ்காரர்கள் சகாய பாரத், ஆராக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்த இருதயராஜ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News