உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவனை பயன்படுத்தி வியாபாரி வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2022-12-17 05:54 GMT   |   Update On 2022-12-17 05:54 GMT
  • பள்ளியில் படித்து வரும் அவரது நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளான்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த மோதிரம், தோடு, வளையல் என 14 பவுன் தங்க நகைகள், ரூ.48 ஆயிரம் பணம் திருடு போனது. இது குறித்து கன்னிவாடி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பாலசுப்பிரமணியனின் 14 வயது மகன் திருமலை ராயபுரத்தில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் படித்து வரும் அவரது நண்பர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளான். அப்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் பீரோவில் நகை, பணம் வைப்பதையும் அவர்கள் சாவியை எங்கே வைக்கின்றனர் என்பதையும் கவனித்து வந்துள்ளான்.

பின்னர் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து கொஞ்சம் கொஞ்சமாக நகையை எடுத்து கன்னிவாடியைச் சேர்ந்த மாரிமுத்து (22), முத்துப்பாண்டி (39) ஆகியோரிடம் கொடுத்து அதனை விற்றுத் தருமாறு கூறியுள்ளார். அவர்கள் இந்த நகை எப்படி கிடைத்தது என்று கேட்ட போது, நடந்ததைக் கூறி இதை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளான்.

இதனையடுத்து நகையை விற்று அதில் சிறிது தொகையை மாணவனுக்கு கொடுத்து விட்டு மற்றவற்றை மாரிமுத்து மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் வைத்துக் கொண்டனர். கடந்த 2 மாதமாக இதே போல் 14 பவுன் நகை மற்றும் ரூ.48 ஆயிரம் பணத்தை மாணவன் மூலம் திருடி அதனை தாங்களும் செலவழித்து வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பள்ளி மாணவன் உள்பட 3 பேரையும் கைது செய்து நகையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News