போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி.
தள்ளுமுள்ளுவில் போலீஸ்காரர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.
டாஸ்மாக் கடை முன்பு திடீர் போராட்டம்
- சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில் அரசு டாஸ்மாக் கடை (எண்.7124) செயல்பட்டு வருகிறது.
- போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்து கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகில் அரசு டாஸ்மாக் கடை (எண்.7124) செயல்பட்டு வருகிறது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே அந்த கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் 12 மணிக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி டாஸ்மாக் கடையின் முன்பாக பாதுகாப்புக்காக சேலம் மாநகர போலீஸ் உதவி கமிஷனர்கள் அசோகன், ஆனந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இரண்டடுக்கு பாதுகாப்பு போட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டக்காரர்கள் ஊர்வலமாக வந்து கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக ஒருவரை இறந்த பிணம் போல் வேடமிட்டு மாலை அணிந்து வந்து நூதனமுறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் கடைக்குள் நுழைய முற்பட்ட தால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளு முள்ளுவின்போது போலீஸ்காரர் ஒருவர் கீேழ விழுந்து காயம் அடைந்தார். இதனால் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவியது.
மேலும் போராட்டக்கா ரர்கள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி டாஸ்மாக் கடைக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.
குண்டுகட்டாக தூக்கி
சென்று கைது செய்ய முற்பட்டபோது, சிலர்
சாலையில் படுத்துக் கொண்டு வாகனத்தில் ஏற மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் கடையின் முன்பாக திரண்டு இருந்த பொதுமக்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறுகையில், குடி மகன்கள் மது குடித்து விட்டு அங்கு கூட்டம் கூட்டமாக நிற்பதால் பெண்கள், பள்ளி மாணவிகள் இவ்வழியாக செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். சில குடிமகன்கள் கேலி கிண்டல் செய்கின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை மூட வேண்டும். இல்லையென்றால் கடையை மூடும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.