உள்ளூர் செய்திகள்

ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு

Published On 2023-11-01 15:47 IST   |   Update On 2023-11-01 15:47:00 IST
  • ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி கோவிலில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி, நேற்று சிறப்பு யாகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராகு, கேது பெயர்ச்சியானது கடந்த மாதம் 8-ந் தேதி நடைபெற்றது.

திருக்கணித வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நேற்று அதன் முழுமை நிறைவு பெற்றதை அடுத்து, ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் இடம் பெயர்ந்து பிரவேசித்தனர்.

ஓசூர் பிரத்தியங்கிரா தேவி கோவிலில், ராகு பகவான் மற்றும் கேது பகவான் மூலவராக ஒரே சந்நிதியில் காட்சி தந்து அருள் பாலித்து வருவது சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நிலையில் இக்கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதில், தமிழகம் மட்டுமின்றி,கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பரிகார பூஜைகளில் கலந்து கொண்டனர்.முன்னதாக மூலவர் ராகு கேது பகவானுக்கு பால், தயிர்,வெண்ணை, சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

பின்னர் வெள்ளிக் கவசம் அணிவித்து மலர் அலங்காரத்தில் காட்சி தந்த மூலவர்களுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News