உள்ளூர் செய்திகள்

பந்தகால் முகூர்த்தத்தை தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.

சட்டைநாதர் சுவாமி கோவில் யாகசாலை பூஜைகளுக்கானபந்தகால் முகூர்த்தம்

Published On 2023-03-18 09:01 GMT   |   Update On 2023-03-18 09:01 GMT
  • மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.
  • திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கு யாகசாலை அமைப்பதற்கான பந்த்கால் முகூர்த்தம் தருமபுரம் ஆதீனம் நேற்று தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

மலைமீது உமா மகேஸ்வரர், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் காட்சி தருகின்றனர்.

இக்கோயிலில் சிவபெருமான் லிங்கம், மூர்த்தம்,சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு காட்சித் தருகிறார்.

திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 24-ந்தேதி கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமார்ச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி நடைபெறவுள்ளது.

அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை மற்றும் பந்தல்கால் அமைப்பதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோயில் கொடிமரம் அருகே பந்தக்காலுக்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மேள, தாளங்கள் முழங்க பந்தக்கால் கோயிலை வலம் வந்து பின்னர் நவகிரக சன்னதி அருகே பந்தகால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து மேல கோபுரவாசல் அருகே யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசுவதற்கான இயந்திரத்தினை பூஜைகள் செய்து தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து முத்துசட்டை நாதர் சுவாமிக்கு புதிதாக அமைக்கப்படும் கருங்கல் மண்டபத்திற்கு கருங்கல் நிலை வைப்பதற்கான சிறப்பு பூஜையையும் தருமபுரம் ஆதீனம் செய்து நிலைப்படி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக சீர்காழி தேரடி சித்தி வினாயகர் கருங்கல் கோவில், பிடாரிவடக்குவீதி பதிணென்புராணேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேகத்திற்காக பந்தகால் முகூர்த்தத்தையும் தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தார்.

இதில் திருப்பணி உபயதாரர்கள் மகாலட்சுமி அம்மையார், மார்கோனி, முரளி, கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் கோவி.நடராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News