உள்ளூர் செய்திகள்

செல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-06-11 08:13 GMT   |   Update On 2022-06-11 08:18 GMT
குமாரபாளையம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம்:

குமாரபாளையம் பாரதி நகரில் செல்வ விநாயகர், செந்தூர் முருகர், ஆதி செல்வா விநாயகர், துர்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு ஆலய மகா கும்பாபிஷேக விழா கடந்த மே மாதம் 26-ந்தேதி முகூர்த்தக்கால் நடுதல் மற்றும் முளைப்பாலிகை இடுதலுடன் தொடங்கியது.

கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர் பூஜை, பஞ்ச கவ்ய பூஜையும், அதே நாளில் காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றன. நேற்று முன்தினம் 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை நடந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று விக்கிரகங்கள் கண் திறப்பு, காப்பு காட்டுதல் மற்றும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்களால் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. யாகசாலை பூஜைகளை ஸ்ரீரங்கம் ஞானமணி குருக்கள் மற்றும் குழுவினர் நடத்தினர். சிற்ப வேலைகளை பெரியார் நகர் கதிர்வேல், மங்கள இசை தர்மபுரி ஜெயபாலன் குழுவினர் செய்திருந்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், தி.மு.க. நகர செயலர் செல்வம், அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, கவுன்சிலர் சத்தியசீலன், பழனிச்சாமி, புருஷோத்தமன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News