உள்ளூர் செய்திகள்
பரமேசுவரசாமி கோவிலில் மர்மமான முறையில் பதுக்கி வைக்கப்பட்ட பழங்கால சாமி சிலைகள் மீட்பு
- பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் திருக்குவளை தாலுகா பண்ணைத் தெருவில் அமைந்துள்ள பன்னகா பரமேசுவர சுவாமி கோவில் பிரகாரத்தில் உள்ள அலமாரியில் கணக்கில் வராத சில பழங்காலச் சிலைகள் கிடப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அலமாரியின் பூட்டை உடைத்து பார்த்தனர். அதில், வள்ளி உலோக சிலை (உயரம் 38.5 செ.மீ., அகலம் 16 செ.மீ., எடை 7.3 கிலோ) புவனேஸ்வரி அம்மன் (உயரம் 30 செ.மீ., அகலம் 13 செ.மீ., எடை 6.2 கிலோ) திருஞான சம்பந்தர் (உயரம் 43 செ.மீ., அகலம் 12 செ.மீ., எடை 9.4 கிலோ) ஆகிய 3 சிலைகள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சிலைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்-யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலைகளை பதுக்கி வைத்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.