கன மழை காரணமாக நள்ளிரவில் மின்சாரம் துண்டிப்பு
- அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு
- தேர்வு நேரங்களில் மின்சாரம் சீராக விநியோகிக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த மழை பெய்தது இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
காலை 7 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் காலையில் எழுந்து படிக்கலாம் என்று நினைத்திருந்த அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 தேர்வு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக நள்ளிரவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் காலை வரை வராததால் மாணவர்கள் காலையில் எழுந்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர். காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் வசதி வாய்ப்பு இல்லாத ஒரு சில மாணவர்கள் காலையில் பள்ளி வளாகத்திற்கு வந்து தங்கள் படிப்பை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறும் பொழுது துண்டிக்கப்படும் மின்சாரம் உடனடியாக சரி செய்து அதை இயக்குவதற்கான வழிமுறை களை மின்சாரத்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் கால தாமதமாக செய்வதால் இன்று அரசு பொதுத் தேர்வு எழுதும் பிளஸ்-1 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எனவே தேர்வு நேரங்களில் மாணவர் நலன் கருதி மின்சார துறை பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படும் மின்சாரத்தை சிறப்பு கவனம் செலுத்தி விரைவில் சரி செய்து இயக்குவதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.