காந்தி ஜெயந்தியன்று 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப் பணிகள் குறித்து விவாதித்தல் , கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ,ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், 2023-24-ஆம் ஆண்டிற்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்துகொண்டு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.