திருமயம் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தல்
- திருமயம் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்
- புதுக்கோட்டை வர்த்தக கழகம் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழக பொதுக்குழு கூட்டம் சில்வர் ஹாலில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சவரிமுத்து ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் கதிரேசன் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வன், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேக்கரி மஹராஜ் உரிமையாளர்அருண்ராஜ் சின்னப்பா, கே.எல்.கே.ஏ.ராஜாமுகமது, அறந்தாங்கி வர்த்தக சங்க தலைவர் காமராஜ், பொன்னமராவதி தலைவர் பழனியப்பன், சாக்குகடை காளிமுத்து ஆகியோர்பாராட்டப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத்அலி, மாநில பேரவை கூடுதல் செயலாளர் சம்பத்குமார், முன்னாள் தலைவர் சேவியர், அஷ்ரப்அலி, உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வர்த்தகர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் திருமயம் வழியாக செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வந்து பேருந்து நிலையம் வழியாக செல்ல மாவட்ட கலெக்டர், போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிடவேண்டும், திருமயம் வழியாக செல்லும் பல்லவன் விரைவு ரெயில் திருமயத்தில் நின்று செல்ல தென்னக ரெயில்வே கோட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது, கீரனூரில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராத போக்குவரத்து சிக்னலை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், கீரனூரில் போக்குவரத்து பணிமனை அமைக்கப்படவேண்டும், மருத்துவமனை தரத்தை உயர்த்த வேண்டும், கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்கப்படவேண்டும், ஆலங்குடிக்கு நள்ளிரவு 1.00 மணியளவில் ஒரு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சமுதாய கூடம் அல்லது திருமண மண்டபம் கட்டி தர நடவடிக்கையை பேரூராட்சி எடுக்க வேண்டும், புதுக்கோட்டையி;ல் திருவப்பூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்து சிறப்பான முறையில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோரிக்கையான ஷேர் ஆட்டோவை கொண்டு வரவேண்டும், மினி பஸ் சர்வீஸ் நகரின் பல பகுதிகளுக்கு கொண்டு வரவேண்டும், பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதிலோ, கொடுப்பதிலோ மறுப்பு தெரிவிக்கக்கூடாது என்ற உத்தரவை மாவட்ட கலெக்டர் உத்திரவாக வெளியிட வேண்டும், நகர் சுற்றி 16 வீதிகளில் கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட வேண்டும், ரயில் வழியாக சரக்குகள் போக்குவரத்து செய்யும் வசதியை ஏற்படுத்தி மேம்படுத்தி தரவேண்டும என்ற 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.