பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
- புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கலெக்டர் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
திருமயம் வட்டம், தேக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் அறந்தாங்கி வட்டம், மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 2 நபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக தலா ரூ.1,00,000 வீதம் ரூ.2,00,000 -க்கான காசேலைகளை கலெக்டர் வாரிசுதாரர்களிடம் வழங்கினார்.
மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6600 வீதம் ரூ.33,000 மதிப்புடைய விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் யந்திரங்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.