உள்ளூர் செய்திகள்

மணிகண்டன்

கொடைக்கானல் அருகே தனியார் ஊழியர் மர்ம மரணம்

Published On 2022-12-13 11:39 IST   |   Update On 2022-12-13 11:39:00 IST
  • வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் தனது அண்ணன் முத்துச்சாமி வீட்டிலேயே வாழ்ந்து வந்தார்.
  • மணிகண்டன் அணிந்திருந்த உடைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவை அருகே தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

கொடைக்கானல்:

திண்டுக்கல் காந்திஜிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது49). பி.காம். சி.ஏ. பட்டதாரி. இவர் கடலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இதனால் அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு வாழ்க்கையில் வெறுப்படைந்த மணிகண்டன் தனது அண்ணன் முத்துச்சாமி வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். வேலைக்கு எதுவும் செல்லாததால் வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 8ந் தேதி தான் வேலை தேடி செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் பூம்பாறை அருகில் உள்ள கருப்பசாமி கோவில் கைகாட்டி பகுதியில் நிர்வாண நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மணிகண்டன் அணிந்திருந்த உடைகள், ஏ.டி.எம். கார்டு ஆகியவை அருகே தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

அதனை வைத்து விசாரணை நடத்தியதில் இறந்தது மணிகண்டன் என தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எவ்வாறு இறந்தார்? என தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே முடிவுகள் தெரியும் என சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News