உள்ளூர் செய்திகள்

8 தோசை சாப்பிட்டுவிட்டு 6 தோசைக்கு பணம் கொடுத்ததாக கூறி வாலிபர்கள் மீது தாக்குதல்- புரோட்டா மாஸ்டர் கைது

Published On 2022-06-18 07:28 GMT   |   Update On 2022-06-18 07:28 GMT
  • ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர்.
  • புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பிளியாம்பாவர் பாரதி (வயது 26). இவரது தம்பி சுதாகரன் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (22). இவர்கள் 3 பேரும் புஞ்சை புளியம்பட்டிக்கு வந்தனர். அவர்கள் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது ஓட்டலில் வேலை செய்பவர்கள் அவர்கள் 8 தோசை சாப்பிட்டதாக கூறினர். அதற்கு அவர்கள் நாங்கள் 6 தோசை தான் சாப்பிட்டோம் என்று கூறினர். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது ஓட்டல் உரிமையாளர் ராமசாமி, புரோட்டா மாஸ்டர் குமார் (40) மற்றும் ஓட்டலில் வேலை செய்யும் 2 பேர் ஆகியோர் சேர்ந்து பாரதி, சுதாகரன், சுரேஷ் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் புரோட்டா மாஸ்டர் குமார் அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து அவர்களை தாக்கி உள்ளார்.

இதில் பாரதி மற்றும் சுதாகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பாரதி மற்றும் சுதாகரன் மீது தாக்குதல் நடத்திய புரோட்டா மாஸ்டர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த குமார், ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் ஓட்டல் தொழிலாளர்கள் 2 பேர் என தெரிய வந்தது.

இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து புரோட்டா மாஸ்டர் குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓட்டல் உரிமையாளர் ராமசாமி மற்றும் 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News