உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே மர வேலை தொழிலாளி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை

Published On 2022-07-31 06:54 GMT   |   Update On 2022-07-31 06:54 GMT
  • கடலூர் அருகே மர வேலை தொழிலாளி அடித்துக்கொலை? போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.
  • கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வாண்டராசன் குப்பம் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). மரவேலை செய்து வந்தார். இவர் இன்று காலை நடுவீரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உடலில் லேசான காயத்துடன் இறந்த நிலையில் கிடந்தார்.

அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து நடுவீரப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் இருந்த கார்த்திகேயன் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கார்த்திகேயன் எப்படி இறந்தார்? இவருடன் யாராவது இருந்தார்களா? என்பதை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து உறவினர்கள், கார்த்திகேயன் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. மேலும் கார்த்திகேயன் அணிந்திருந்த கைலி மற்றும் உடலில் லேசான காயம் இருப்பதால் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News